பண் - செவ்வளி
2ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தொண்டரஞ்சு களிறும் மடக்கிச் சுரும்பார் மலர்
இண்டை கட்டி வழிபாடு செய்யுமிடமென்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
கெண்டை பாயச சுனைநீல பொட்டலருங் கேதாரமே.
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேர்த்தவே
வேதநான்கும் பதினெட்டோடாறும் விரிந்தார்க்கிடம்
தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம் பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.
முந்தி வந்து புரோதாய மூழ்கி முனிகள் பலர்
எந்தை பெம்மானென நின்றிறைஞ்சும் மிடமென்பரால்
மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்
கெந்த நாநக் கிளருஞ சடையெந்தை கேதாரமே.
உள்ளமிக்கார் குதிரை முகத்தார் ஒருகாலர்கள்
எள்களில்லா இமையோர்கள் சேருமிடமென்பரால்
பிள்ளை துள்ளிக் கிளைபயில்வ கேட்டுப் பிரியாது போய்க்
கிள்ளை யேனற் கதிர் கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.
ஊழியூழி யுணர்வோர்கள் வேதத்தினொன் பொருள்களால்
வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும் மிடமென்பரால்
மேழிதாங்கி உருவார்கள் போலவ்விரை தேரிய
கேழல் பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.
நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரைதன் மேல்
தேறுசிந்தையுடையார்கள் சேரும் மிடமென்பரால்
ஏறுமாவின் கனியும் பலாவின்னிருஞ் சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையொடுண்டுகளுங் கேதாரமே.
மடந்தை பாகத் தடக்கும் மறையோதி வானோர் தொழத்
தொடர்ந்த நம்மேல் வினைதீர்க்க நின்றார்க் கிடமென்பரால்
உடைந்த காற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக்கல் லறை கண்மேல்
கிடந்த வேங்கை சினமாமுகஞ் செய்யுங் கேதாரமே.
அரவமும்நீ ரணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலால் அடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செயுங் கேதாரமே.
ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர்
தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க் கிடமென்பரால்
வீழ்ந்து செற்று நிழற்கிறங்கும் வேழத்தின் வெண்மருப்பினைக்
கீழ்ந்து சிங்கங் குருகுண்ண முத்து திருக்கேதாரமே.
கடுக்கள் தின்று கழிமீன் கவர்வார்கள் மாசுடம்பினர்
இடுக்கனுய்ப்பார் அவரெய்த வொண்ணா இடமென்பரால்
அடுக்க நின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக்
கெடுக்க நின்று பெருமான் உறைகின்ற கேதாரமே.
வாய்ந்த செந்நெல் விளைகழனி மல்கும் வயற் காழியான்
ஏய்த்த நீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் மிரைவல்லவர்
வேந்தராகி உலகாண்டு வீடுகதி பெறுவாரே.